சுற்றுலா பயணிகளை ஈர்க்க கேரள அரசு புதிய திட்டம்: எழில் கொஞ்சும் இடங்களை காண ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்காத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு அழைத்து செல்ல கேரள அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக சுற்றுலாத் துறை துணை இயக்குநர் ஜி.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

கேரளா சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில், கடற்கரை பின்புறமுள்ள எழில் மிகு கிராமங்களையும், அதிகம் அறியப்படாத இடங்களை பார்க்கவும், புத்துணர்வு மற்றும் கற்றல் அனுபவத்தை பெறவும் பல்வேறு புதிய திட்டங்களை கேரள அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதையொட்டி, கேரள சுற்றுலா துறையின் பயண வர்த்தக கண்காட்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

அப்போது துணை இயக்குநர் ஜி.ஸ்ரீகுமார் பேசியதாவது: கேரள சுற்றுலாத் துறை இனி கடற்கரைகள், மலைவாழ் இடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கேரளம் முழுவதையும் சுற்றுலா தலமாக மாற்ற உள்ளோம். மேலும்,படகு இல்லம், கேரவான், பாரம்பரிய மற்றும் கலாச்சார இடங்கள் என சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்க இருக்கிறோம்.

கேரளத்தின் படகு இல்லங்கள், கேரவான், வனப்பகுதி, மலைத்தோட்டங்கள், வீடுகள் ஆகியவற்றில் தங்குதலும், ஆயுர்வேத அடிப்படையிலான மருத்துவ சிகிச்சை தீர்வுகளும், சாகசப் பயணங்கள், நடை பயணங்கள், மலையேறுதல் உள்ளிட்டவையும் பயணிகளுக்கு நல்ல அனுபவங்களை தரும். அதிகம் பயணிக்காத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வதே கேரள சுற்றுலாத் துறையின் முக்கிய நோக்கம்.

‘கேரவான் டூரிசம்’, ‘கேரவான் கேரளம்’ உள்ளிட்ட புதிய திட்டங்கள் மூலம், கடற்கரைகள், மலைவாச இடங்கள், படகு வீடுகள், உப்பங்கழி பிரிவுகளுக்கும் பயணிகளை ஈர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் மட்டும் 1.33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE