கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: மேகக் கூட்டங்களுக்கு நடுவே இயற்கை எழிலை ரசித்தனர்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: விடுமுறை நாட்களை முன்னிட்டு கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இவர்கள் மேகக் கூட்டங்களுக்கு நடுவே இயற்கை எழிலை ரசித்தனர்.

கொடைக்கானலுக்கு கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது குளிர் சீசனை அனுபவிக்க அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனில் கொடைக் கானலில் சில தினங்கள் தங்கி இயற்கை எழிலை ரசித்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குளிர் சீசனில் இரவு அதிக குளிரை சமாளிக்க முடியாமல் ஒரு நாள் சுற்றுலாவாக மாற்றி பலரும் ஊருக்குத் திரும்புகின்றனர்.

வார விடுமுறையான கடந்த இரு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலாத் தலங்களான மோயர் ச‌துக்க‌ம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் ம‌ர‌க் காடுக‌ள், கோக்க‌ர்ஸ் வாக் உட்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் மேகக் கூட்டங்களுக்கு நடுவே இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். கொடைக்கான‌ல் ம‌லைப் ப‌குதிக‌ளில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வ‌ட்ட‌க்கான‌ல் அருவி, கரடிச் சோலை அருவி ஆகியவை முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர்.கொடைக்கானலில் நேற்று பகலில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது. வெப்பநிலை ஒற்றை இலக்கை தொட்டதால் இரவில் கடும் குளிர் காணப்பட்டது. காற்றில் 98 சதவீதம் ஈரப்பதம் இருந்ததால் மிதமான காற்று வீசியபோதும் கடும் குளிர் நிலவியது.

குளிரை தாக்குப் பிடிக்க முடியாத சுற்றுலா பயணிகள் ஒரு நாள் சுற்றுலாவாக முடித்துக்கொண்டு ஊர் திரும்பினர். வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் மட்டும் இரவில் தங்கி குளிர் சீசனை அனு பவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE