வால்பாறையில் படகு இல்லம் பயன்பாட்டுக்கு வராததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: வால்பாறையில் படகு இல்லம் பயன்பாட்டுக்கு வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நகராட்சி சார்பில் ரூ.5.6 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும், ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டன.

தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா திறக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

படகு இல்லம் அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தை பயன்படுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின், படகு இல்லம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு படகு இல்லம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE