சென்னை: சென்னையில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வழியாக உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜூக்கும் ரயில்கள் மூலமாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா உட்பட பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னையிலிருந்து காஷ்மீ ர் மாநிலம் ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மர்க் மற்றும் பஹல்காம் ஆகிய இடங்களுக்கு ரயில்கள் மூலமாக சிறப்பு சுற்றுலாவுக்கு பயணிகள்அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த ரயில் அக்.19-ம் தேதி புறப்படுகிறது. பயணி ஒருவருக்கு கட்டணமாக ரூ.35,040 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, சென்னையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-க்கு (அலகாபாத்துக்கு) சுற்றுலா ரயில் அக்.28-ம் தேதி புறப்படுகிறது. காசி, கயாவுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர். மூன்றடுக்கு ஏசி ரயில் பெட்டிகள், மூன்று வேளை சைவ உணவு, தங்கும் வசதி, உள்ளூர் போக்குரத்து வசதி, பயணக்காப்பீடு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய வசதிகள் உள்ளன.
இதுதவிர, சென்னை, திருச்சியில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களைப் பெற 9003140682, 8287932070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இந்தத் தகவலை ஐஆர்சிடிசி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.