உதகை தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களை கவர்ந்த இருவண்ண டேலியா மலர்கள்

By செய்திப்பிரிவு

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே பூவில் இரு வண்ணத்தில் காணப்படும் டேலியா மலர்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு, அவை தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.

ஒரே செடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு வண்ண டேலியா மலர்கள் பூத்துள்ளது, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “ஒரே வண்ணம் அல்லது கலவையான வண்ணம் கொண்ட மலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த டேலியா மலர்கள் பாதி மஞ்சளாகவும், பாதிசிவப்பாகவும் இருப்பது வித்தியாசமாக உள்ளது” என்றனர்.

பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெட்டுனியா, சால்வியா, டேலியா, மேரிகோல்டு, பிரன்ஞ்சு மேரிகோல்டு உள்ளிட்ட பல வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE