தொட்டபெட்டா சிகரம் செல்ல ஆக.22 வரை வனத் துறை தடை விதிப்பு

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் பாஸ்ட் டேக் சோதனைச் சாவடி மாற்றியமைக்கும் இறுதி கட்டப்பணிகள் நடப்பதால், வரும் 22-ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சம் பேரும் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் முடிந்தும், பள்ளிகள் திறக்க ஓரிரு நாட்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பொதுவாக உதகையில் தாவரவியல் பூங்கா படகு இல்லம் தொட்ட பெட்டா உட்பட்ட இடங்களுக்கு ஒரே நாளில் சென்று வர திட்டமிட்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொட்ட பெட்டா போன்ற இடங்களுக்கு செல்லும்போது வாகன கட்டணம் வசூலிக்க காத்திருத்தல் போன்ற காரணங்களால் திட்டமிட்டபடி அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அவர்களால் போக முடிவது இல்லை.

இதனால், கூடுதலாக உதகையில் ஒரு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரம் காத்திருக்கும் போது வாகனங்களுக்கு எரி பொருள் செலவும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை சார்பில் தொட்ட பெட்டா சோதனை சாவடியில் "பாஸ்ட் டேக்" மின்னனு பரிவர்த்தனையை கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்நிலையில், பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் இறுதி பணி நடக்கவுள்ளதால் வரும் 22ம் தேதி வரை தொட்ட பெட்டா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, "உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாஸ்ட் டேக் சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனவே, நாளை (ஆக.20) முதல் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு தொட்ட பெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று வனத்துறையினர் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE