புதுப்பொலிவு பெறும் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம் - ரூ.96 லட்சத்தில் பணிகள் விறுவிறுப்பு

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் வேலூர் நகரம் முக்கிய இடத்தை பிடித்தது. இங்கு, 16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின்கட்டுப்பாட்டில் செயல்பட்ட நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை பல வரலாறுகளை தன்னுள் மறைத்து வைத்துள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் புரட்சி வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை ஆங்கிலேய படைகளில் இருந்த இந்திய வீரர்களால் நடத்தப்பட்டது. முதல் இந்திய சுதந்திர போராட்டமாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இப்படி, சிறப்புமிக்க வரலாற்றை எடுத்துரைத்து வருவதில் வேலூர் அரசு அருங்காட்சியகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள நகர அரங்கில் (டவுன் ஹால்) கடந்த 1985-ம் ஆண்டு அரசு அருங்காட்சியகம் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்றை எடுத்துக்காட்டும் அரிய கற்சிற்பங்களைக் கொண்டு அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு கால கட்டங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப்பட்ட கற்சிலைகள், நடுகற்கள், பேழைகள், நாணயங்கள், ஐம்பொன் சிலைகள் உள்ளிட்டவற்றால் அரசு அருங்காட்சியகம் வேகமாக வளர தொடங்கியது.

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புதுப்பிக்கப்பட்ட
அறையில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

அதேநேரம், வேலூர் கோட்டையில் செயல்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெளியேறியநிலையில் மாவட்ட நீதிமன்ற வளாகமாக செயல்பட்ட கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு, கடந்த 1999-ம் ஆண்டு முதல் 8 பிரிவுகளுடன் கூடிய அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை கடந்து இன்றவும் அதிக பார்வையாளர்களை அரசு அருங்காட்சியகம் கவர்ந்து வருகிறது. அருங்காட்சியக வளாகத்தில் உள்ள டைனோசர் சிலை அதன் அடையாளத்தை எடுத்து காட்டி வருகிறது. ஏறக்குறைய 24 ஆண்டுகள் கடந்த வேலூர் கோட்டை அரசு அருங்காட்சி்யகம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிக்கான அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது.

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் முன்பாக
உள்ள டைனோசர் சிலை. | படங்கள் : வி.எம்.மணிநாதன் |

நவீன விளக்கு வசதிகள், ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்குகள், முப்பரிமாண காட்சிகள் அடங்கிய கூடம் உள்ளிட்டவை அமையவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ரூ.96 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ள அருங்காட்சியகத்தில் 1,400 ஆண்டுகள் பழமையான கற்சிற்பக் கூடம், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் அடங்கிய படிமக்கூடம், 200 ஆண்டுகள் பழமையான போர் வாள்கள் அடங்கிய கூடம், ஓவியக்கூடம், மானுடவியல் கூடம், வேலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் அடங்கிய கூடம் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியதாக இருக்கும்.

இந்த பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. நவீன மயமாகும் அரசு அருங்காட்சியக கூடம் பார்வையாளர்களை அதிகம் கவரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதேபோல், இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.2.50 கோடியில் அரசு அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக, அருங்காட்சியகத்துக்கு எதிரேஉள்ள கட்டிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு என்னவெல்லாம் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விரைவில் அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்படும். அதன் பிறகு அதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE