முதலை கடித்து உணவளிக்கச் சென்ற ஊழியர் படுகாயம் @ வண்டலூர் உயிரியல் பூங்கா

By பெ.ஜேம்ஸ்குமார்


செங்கல்பட்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உணவு கொடுக்கச் சென்ற ஊழியரை முதலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முதலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விஜி என்பவர் முதலைகளுக்கு உணவளித்து, பராமரிக்கும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல, வியாழக்கிழமை காலை பணிக்குச் சென்ற விஜி, முதலைக்கு மாமிச உணவுகளை வழங்கியுள்ளார். அப்போது திடீரென முதலை ஒன்று விஜி மீது பாய்ந்து கடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத விஜி, வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஊழியர்கள், கட்டையால் முதலையை தாக்கி அடித்து விரட்டினர்.

முதலை தாக்கியதில் கை, கால் பகுதியில் காயமடைந்த விஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் தொடர்ந்து ஊழியர்களை விலங்குகள் தாக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE