கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச் சாலை யில் சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பக் கூடிய இடமாக நட்சத்திர வடிவிலான ஏரி உள்ளது. ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிளிங் செய்யவும் சுற்றுலாப் பயணிகள் தவறுவதில்லை. தற்போது கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுலா இடங்களில் வாகன நிறுத்தும் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தும் நிலை உள்ளது. குறிப்பாக பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் மற்றும் ஏரிக்கு வருவோர் தங்கள் வாகனங்களை ஏரிச் சாலையில் நிறுத்து கின்றனர். அதனால் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்யவும், அந்த வழியாக உள்ளூர் மக்கள் சென்று வருவதற்கும் சிரமப்படுகின்றனர். மேலும் போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீஸார் அடிக்கடி வாகனங்களை ஒழுங்கு படுத்தினாலும் வாகனங்களின் ஆக்கிரமிப்பு குறைந்தபாடில்லை. எனவே ஏரிச் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
» கும்பக்கரை அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» வைகை அணை தரைப்பாலத்தை மூழ்கடித்த தண்ணீர் - சுற்றுலா பயணிகள் கடந்து செல்ல தடை