ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள், குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற காட்டு மாடுகள், குட்டிகளுடன் சாலையின் குறுக்கே நின்றன. அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் சாலையிலேயே காத்திருந்தனர். காட்டு மாடுகள் வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகள் வனப்பகுதி வழியாக செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகள் தென்பட்டால், அதனருகே சென்று செல்ஃபி எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. சாலையில் வன விலங்குகள் நின்று கொண்டிருந்ததால், அவை வனப் பகுதிக்குள் செல்லும் வரை காத்திருக்க வேண்டும்’’ என்றனர்.