பொதுப்பணித் துறை சார்பில் ரூ.6.79 கோடி மதிப்பில் சுற்றுலா மாளிகை: செங்கையில் அமைச்சர்கள் திறந்துவைத்தனர்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையை அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தனர்.

செங்கல்பட்டில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையை ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் திறந்து வைத்தனர்.

இந்த சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணி 2022-ம் ஆண்டு அக். 21-ம் தேதி, தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இரண்டு தளங்களுடன் தலா 570 சதுர மீட்டர் (6,133 சதுரஅடி) தரைப்பரப்பளவுடன் மொத்தமாக 1,140 சதுரமீட்டர் (12,266 சதுர அடி) பரப்பளவுடன் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

தரை தளத்தில் 2 தங்கும் அறைகள், 2 வரவேற்பு அறையுடன் கூடிய தங்கும் அறைகள்,2 வரவேற்பு அறைகள், உணவுக்கூடம் ஆகியவற்றுடன் கூடிய தங்கும் அறைகள், பொது உணவுக்கூடம், ஒரு சமையலறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

முதல் தளம் 2 உணவுக் கூடங்கள் ஆகியவற்றுடன், வரவேற்பு அறை, தங்கும் அறைகள், மிக முக்கிய விருந்தினருக்கான தனிச்சிறப்புடைய தங்கும் அறை, தனிசெயலாளர் தங்கும் அறை, சிறப்பு உணவுக்கூடம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி, அரவிந்த் ரமேஷ், பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் க.ஆயிரத்தரசு இராசசேகரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE