4-ம் ஆண்டில் ஸ்ரீவில்லி. மேகமலை புலிகள் காப்பகம் - சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படுமா?

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படுமா என்று வன உயிரின ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் வகையில் 1988-ம் ஆண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைக்கப்பட்டது. இங்கு சாம்பல் நிற அணில்கள், சிறுத்தை, புள்ளிமான், மிளா மான், சருகு மான், யானை, கரடி, காட்டுப் பன்றி, காட்டு மாடு, வரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் 250 வகையான பறவை இனங்கள் உள்ளன.

2017 - 2018-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரியாறு புலிகள் காப்பக எல்லை முதல் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் வரை 14 புலிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புலிகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் இப்பகுதிகளை இணைத்து புலிகள் காப்பகமாக அறிவிக்க தேசிய புலிகள் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டு பிப். 9-ம் தேதி தமிழகத்தில் முதுமலை, களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகியவற்றுக்கு அடுத்து 5-வதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டது. இது நாட்டின் 51-வது புலிகள் காப்பகமாகும். புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட தால் வனப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் கருதினர்.

ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத தால் வனப்பரப்பை அதிகரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணிப்பு, நவீன தகவல் தொடர்பு, ரோந்து வாகனம், வனப்பகுதியில் விலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், பழங்குடியினருக்கு மாற்று வருவாய் ஆதாரம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் பரப்பளவு உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப் படாததால் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புலிகள் நடமாட்டம் குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பறவைகள், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பசுமை காடுகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சூழல் சுற்றுலா ஏற்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் கூறியதாவது: தேசிய புலிகள் கணக்கெடுப்பின் போது பொருத்தப்பட்ட கேமராக்களில் புலிகள் நடமாட்டம் சரியாக பதிவாகவில்லை. அடர் வனப்பகுதியில் புலிகள் இருப்பதற்கான பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன. தேசிய புலிகள் திட்டம், பசுமை தமிழகம் திட்டம், சூழல் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு உள்ளிட்ட பல்வேறு நிதியின் கீழ் புலிகள் காப்பகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் 70 வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE