இயற்கையை ரசிக்க அழைக்கும் ஜீன்பூல்: வனத்துறை சார்பில் ஜிப்லைன், சூழல் சுற்றுலா

By ஆர்.டி.சிவசங்கர்


கூடலூர் : நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இல்லாத பல அழகியல் சிறப்புகளை கொண்டது. முற்றிலும் மலைப் பகுதியில் அமைந்துள்ள இம் மாவட்டம், மலையும், வனமும் குறையாத அழகுடன் காணப்படுகிறது. தனிமை விரும்பிகளுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டத்தில், காணும் இடம் அத்தனையும் சுற்றுலா தலங்கள்தான். மேட்டுப்பாளையத்தை கடந்து பர்லியாறில் தொடங்கி குன்னூர், அவலாஞ்சி, உதகை, கூடலூர் வரை எத்தனை இடங்கள் என்று எண்ணவே முடியாது.

இதேபோல் கோத்தகிரி, கோடநாடு உள்ளிட்ட பகுதிகளின் அழகும் மெய்சிலிர்க்க வைக்கும். நீலகிரி மாவட்டத்துக்கு அழகை ரசிக்கவும், தங்கி ஓய்வெடுக்கவும், உற்சாக மாக நண்பர்களுடன் விளையாடவும், தேனிலவுக்கு இங்கு வருவோரும் ஏராளம். தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருவதுடன் படகு சவாரி, மலை ரயிலில் பயணித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடலூர் அருகே நாடுகாணி யில் தாவர மரபியல் பூங்கா (ஜீன்பூல்) அமைந்திருக்கிறது. இங்கு அரிய வகை தாவரங்கள், மீன் காட்சியகம், வன விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடற்பாகங்கள், இயற்கை பள்ளத்தாக்குகள் கொண்ட காட்சி முனை ஆகியவை சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த பகுதியில் சுற்றுலா சார்ந்த பல்வேறு திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஜிப்லைன் சாகச பயணம் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இந்நிலையில், ஜிப்லைன் சாகச பயணம் தொடர்பான கட்டமைப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தாவர மரபியல் பூங்காவின் புல்வெளிகள், இயற்கை அழகு மலைத்தொடர் காட்சிகள் ஆகியவற்றை ரசிக்கும் வகையில் சுமார் 550 மீட்டர் தூரத்துக்கு ஜிப்லைன் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டுமே பயணிக்க முடியும். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமாகவும் கட்டமைத்துள்ளார்கள். இந்த ஜிப்லைன் சாகச பயணம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE