ராமேசுவரம்: சிதம்பரம் திருவாதிரை விழாவில் இலங்கை பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, நாகை-காங்கேசன்துறை பயணி கள் கப்பலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங் களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலை, நடராஜர் சிலைகளிலேயே முதன் முதலாக வடிவமைக்கப்பட்டது என தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாக னங்களில் பஞ்சமூர்த்திகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். டிச.26-ம் தேதி தேர்த் திருவிழாவும், டிச.27-ல் ஆருத்ரா தரிசனமும், டிச.28-ல் பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவும் நடைபெறுகின்றன.
இலங்கையில் உள்ள பவுத்தர்கள் இந்தியாவில் உள்ள கயாவுக்கும், கிறிஸ்தவர்கள் ஜெருசலத்துக்கும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கும் அந்நாட்டு அரசு வசதிகள் செய்து தருகின்றது. அதேபோல், சிதம்பரத்தில் நடை பெறும் திருவாதிரை திருவிழாவில் பங்கேற்க, இலங்கையிலுள்ள இந்து பக்தர்கள் சிறப்பு கப்பல் மூலம் குறைந்த செலவில் இந்தியா சென்றுவர அனுமதிக்க வேண்டும், என பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாகை துறைமு கத்திலிருந்து இலங்கையிலுள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த அக்.14-ம் தேதி தொடங்கியது. ஆனால், அக்.20-ம் தேதியுடன் இந்தக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. வடகிழக்குப் பருவ மழை மற்றும் நாகை துறைமுக விரிவாக்கப் பணி காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து இலங்கை யாழ்ப் பாணத்திலுள்ள சைவ பரிபாலன சபை, இந்து சமயப் பேரவை, கொடிகாமம் சிவத்தொண்டர் பேரவை ஆகியவற்றின் நிர்வாகிகள் கூறியதாவது: சிதம்பரம் திருவாதிரை விழாவுக்காக, யாழ்ப்பாணம் காங்கேசன்துறையி லிருந்து காரைக்காலுக்கு சிறப்பு கப்பல் சேவையை இயக்குவதற்கான கோரிக்கையை இந்திய அரசு 2016-ம் ஆண்டே ஏற்றுக்கொண்டது. ஆனால், இரு நாட்டு வெளியுறவுத் துறையினால் பயண ஏற்பாட்டை உடனடியாக செய்ய முடிய வில்லை. எனவே, சிதம்பரம் திருவாதிரை திருவிழாவில் பங்கேற்க, இலங்கை பக்தர்களின் வசதிக்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து நாகைக்கு மீண்டும் கப்பல் சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.