உடுமலை: கனமழை காரணமாக திரு மூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாக கன மழை பெய்தது. இதனால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அருவியில் குளிப்பது ஆபத்து. பயணிகளின் நலன்கருதி, அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழல் நிலவும்போது அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்’’ என்றனர்.