கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை முன்கூட்டியே மூடும் வனத்துறை

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களை வனத்துறையினர் முன்கூட்டியே மூடியதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று வனத்துறை சுற்றுலா இடங்களை மாலை 4.30 மணிக்கே மூடியது. மேலும் சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

இதனால் சுற்றுலா இடங்களை பார்வையிட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் கூடுதல் நேரம் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் வனத்துறையினர் கூறுகையில், சுற்றுலா இடங்களில் காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்கூட்டியே சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE