தமிழர் புகழ்பாட உருவாகிறது பொருநை அருங்காட்சியகம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: தமிழக தொல்லியல்துறை சார்பில் திருநெல்வேலியில் ரூ.33.02 கோடி மதிப்பீட்டில் உலக தரத்தில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் நாகரிக தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்க கால பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தை சேர்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்காக திருநெல்வேலியில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 13.02 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் அருங்காட்சியக கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து கடந்த மே 18-ம் தேதி தொடங்கி வைத்தார். தற்போது இந்த அருங்காட்சியக கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அருங்காட்சியக கட்டிட மாதிரி தோற்றம்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்த நிலையில், திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியக வளாகத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாக கட்டிடம் என 4 முதன்மைப் பிரிவுகள் கட்டப்படுகின்றன. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் இப்பகுதி வட்டார கட்டிட கலை தன்மையை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள், முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினை திறனின் கூறுகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் மாதிரி. (ஏரியல் வியூ) படங்கள்: மு. லெட்சுமி அருண்

அருங்காட்சியகத்தின் மொத்த கட்டிட பரப்பு 54,296 சதுர அடி. சிற்றுண்டிச்சாலை, கைவினை பொருட்கள் பட்டறை, கழிப்பறைகள், வாகன நிறுத்தும் வசதி, நுழைவு வாயில்கள், சுற்றுச்சுவர்களும் அமைக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் திறந்தவெளி பகுதிகளில் உள்ளூர் தாவர வகைகளை நட்டு இயற்கை தோட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும், அதன்பின் அழகு வேலைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முடித்தபின் பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE