கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு செல்ல பயணிகளுக்கு தடை

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் பாய்ண்ட், தூண் பாறை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி உள்ளிட்டவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் , வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஆக.15) மாலை பைன் மரக்காடுகள் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வேன் மீது, மற்றொரு சுற்றுலா வேன் மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுற்றுலா இடங்களில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத்தே விபத்துக்கு காரணம் என சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, பராமரிப்பு பணி காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் வனத்துறையின் இந்த அறிவிப்புக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE