கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் நில‌வும் குளுமையான தட்பவெப்பநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள், தூண் பாறை, குணா குகை, பிரையன்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். மோயர் சதுக்கம் பகுதியில் மேகக் கூட்டங்கள் தழுவிச் சென்றதை வெகுவாக ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும், சைக்கிள் ஓட்டியும் மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் சுற்றுலா தலங்களிலும், நகர் பகுதிகளிலும் கடும் நெரிசல் காணப்பட்டது. குறைவான போலீஸாரே இருந்ததால் மிகவும் சிரமப்பட்டனர். வாகனத்தில் இருந்தவர்களே சில இடங்களில் இறங்கி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

பூம்பாறை மேல்ம‌லைக் கிராமப‌குதியில் இருந்து கர்ப்பிணியை பிரசவத்துக்கு அழைத்து வரச்சென்ற 108 ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. இதையடுத்து வாகனங்களில் சுற்றுலா வந்தவர்கள் இறங்கி வழி ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE