கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வாகனங்களின் கட்டணம் உயர்வு

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல ஆக.2-ம் தேதி முதல் காருக்கு ரூ.300, வேனுக்கு ரூ.600 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரிக்குச் செல்ல முடியும். வனத்துறை வாகனத்தில் செல்ல ஒரு நபருக்கு ரூ.100, சொந்த மற்றும் வாடகை வானங்களில் பயணிக்க காருக்கு ரூ.200, வேனுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்நிலையில் ஆக.2-ம் தேதி முதல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல நுழைவுக் கட்டணமாக காருக்கு ரூ.300, வேனுக்கு ரூ.600 என உயர்த்தப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டண உயர்வால் பேரிஜம் ஏரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சுற்றுலாவை நம்பியுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE