கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, கயா சுற்றுலா: ஐஆர்சிடிசி சார்பில் முன்பதிவு தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், கயா சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறப்பு ரயில் மூலம் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, விமான பயணத் திட்டங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில்,

அன்னபூரணி கோயில், காசி விசாலாட்சி கோயில், காலபைரவர் கோயில், சாரநாத், கங்கா ஆர்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் கோயில், அலகாபாத் கோட்டை, புத்தகயாவில் அமைந்துள்ள புத்தர் சிலை, மகாபோதி கோயில், கயாவில் அமைந்துள்ள விஷ்ணு பாத கோயில் போன்ற இடங்களை காண ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சுற்றுலாவுக்கு ரூ.37,250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விமானக் கட்டணம், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, ஏசி வாகன வசதி, காலை, இரவு உணவு ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி சலுகைகளை பெறலாம்.

இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்கள் பெறவும், முன்பதிவுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி கோவை அலுவலகத்தை 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE