கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களைப் பார்க்கலாம். இந்நிலையில் இன்று (ஜூலை 2) அதிகாலை முதல் பேரிஜம் ஏரிப் பகுதிகளில் 4 யானைகள் குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன.

அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. வார விடுமுறை நாளான இன்று பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. யானைகள் நடமாட்டம் காரணமாக பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். யானைகள் பேரிஜம் ஏரி பகுதியை விட்டு இடம் பெயர்ந்ததும் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE