உதகையில் சுற்று பேருந்துகளுக்கு சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு

By செய்திப்பிரிவு

உதகை: பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், உதகையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். மே மாதம் கோடை விழாவையொட்டி உதகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை 8.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நேற்றுடன் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிமாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் திரண்டனர். உதகை தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அங்குள்ள பெரிய புல்வெளி மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர்.

நேற்று ஒரே நாளில் தாவரவியல் பூங்காவுக்கு 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்புப் படகுகள் இயக்கப் பட்டன.படகுகளில் தங்களது குழந்தைகளுடன் உற்சாகமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

சுற்று பேருந்துகள்​​

சுற்று பேருந்துகளுக்கு வரவேற்பு: உதகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாக அரசு போக்குவரத்துக்கழகம்சார்பில் சுற்று பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சுற்று பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.100, குழந்தைகளுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இம்முறை சீசன் தொடக்கத்தில் 4 பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களில் சர்க்கியூட் பேருந்துகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம், போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.

நேற்றும் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், சர்க்கியூட் பேருந்துகள் மற்றும்பார்க் அண்ட் ரெய்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE