கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - டாக்டர் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு; மேலாளர் கைது :

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, டாக்டர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மருத்துவமனை மேலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான டாக்டரைத் தேடி வருகின்றனர்.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ரஜினிகாந்த்(55). இவரது மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றி வருபவர் சரவணன்(55). இந்த மருத்துமனையில் பணியாற்றி வந்த கணவரை இழந்த பெண் ஒருவர், தீபாவளி போனஸ் குறைவாக வழங்கியதால் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. மேலும், தொடர்ந்து வேலைக்கும் செல்லவில்லை.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் 17 வயதான மகளை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட டாக்டர் ரஜினிகாந்த், அவரது தாயார் பணிக்கு வராதது குறித்து கேட்டுள்ளார். அதற்கு தனது தாயாருக்கு மற்றவர்களைவிட போனஸ் குறைவாக வழங்கியதால் அவர் பணிக்கு வரவில்லை என அச்சிறுமி தகவல் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமியைதொலைபேசியில் தொடர்புகொண்ட மருத்துவமனை மேலாளர் சரவணன், மருத்துவமனைக்கு வந்து தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடைகளை வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். மேலும், டாக்டர் வெளியில் செல்ல உள்ளதால் உடனே மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனால், நேற்று முன்தினம் மாலை மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மேலாளர் சரவணன் உடந்தையாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மேலாளர் சரவணனை நேற்றுகைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான டாக்டர் ரஜினிகாந்தைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்