நீர்வளத் துறை செயலராக சந்தீப் சக்சேனா நியமனம் - நிதி, தொழில் துறை செயலர்கள் உட்பட 10 ஐஏஎஸ்கள் இடமாற்றம் : தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு

நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் துறை செயலர் நா.முருகா னந்தம் உட்பட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலக கூடுதல் செயலராக இருந்து தமிழக பணிக்கு திரும்பிய பி.அமுதாவுக்கு, ஊரக வளர்ச்சித் துறை செயலராக புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக நிதித் துறை செயலராகஉள்ள ச.கிருஷ்ணன், தொழில்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த நா.முருகானந்தம், தமிழக நிதித் துறை செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலக கூடுதல் செயலராக இருந்து தமிழக பணிக்கு திரும்பிய பி.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை செயலர்கே.கோபால், போக்குவரத்துதுறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தயானந்த் கட்டாரியா பொதுப்பணித் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பணித் துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா புதியதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, மின்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தர்மேந்திர பிரதாப்யாதவ் கைத்தறி, துணி நூல்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைத்தறி துறை செயலராக இருந்த செல்வி அபூர்வா, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராகவும், கைத்தறி மற்றும் துணி நூல்துறை ஆணையர் பீலாராஜேஷ், நில சீர்திருத்த துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்