வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுவை அடுத்த பாஸ்மார்பெண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(36). கட்டிட மேஸ்திரியான இவரும், இவரது மனைவி காமாட்சி (30), மகன்கள் சரண் (6), விண்ணரசன் (4) ஆகியோர் காட்பாடியை அடுத்த வள்ளிமலை கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி, கட்டிட வேலை பார்த்து வந்தனர்.
பாஸ்மார்பெண்டா கிராமத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள ராஜா தனது மனைவி, மகன்களுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் நேற்று பிற்பகல் புறப்பட்டுளார்.
பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வேகமாக சென்றபோது எதிர் திசையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மைதாமூட்டைகளுடன் சென்ற கன்டெய்னர் லாரியின்முன்புறம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டதில் ராஜா, காமாட்சி மற்றும் சரண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் விண்ணரசன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் முருகனை(35) போலீஸார் கைது செய்தனர்.