புளியங்குடி டிஎஸ்பி கரோனா தொற்றால் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி நேற்று உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.9.2020 முதல் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் சுவாமிநாதன் (48). கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி எஸ்பி சுகுணாசிங், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், சாத்தூர் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், எஸ்பிசிஐடி டிஎஸ்பி குப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் அவரதுஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக காவல்துறையில் 1997-ம்ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த சுவாமிநாதன், 2020-ம் ஆண்டு டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு, யமுனா என்ற மனைவியும், சஹானா(13), சாதனா(12), சந்தோஷ்(9) என 3 குழந்தைகளும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE