ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதியிலிருந்து வஸ்திர மரியாதை

By செய்திப்பிரிவு

திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை நேற்று வழங்கப்பட்டது.

கி.பி. 1320-ம் ஆண்டில் ரங்கத்தில் நடைபெற்ற இஸ்லாமியர் படையெடுப்பின்போது, ஏறத்தாழ 40 ஆண்டுகள் ரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் திருப்பதி திருமலை கோயிலில் வைத்துப் பாதுகாக்கப்பட்டார்.

அவ்வாறு நம்பெருமாள் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோயிலில் ‘ரங்கநாயகலு மண்டபம்’ என்ற பெயரில் இன்றும் உள்ளது. இந்த மண்டபத்தில், கோயிலின் முக்கிய நிகழ்வுகள் இன்றும் நடைபெறுகின்றன.

திருமலை திருப்பதிக்கும் ரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வந்த நிலையில், காலப்போக்கில் அவை நின்றுபோயின. தற்போது, அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

புது வஸ்திரங்கள்

அந்தவகையில், ஆண்டுதோறும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் கைசிக ஏகாதசி விழாவன்று ரங்கம் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டுக்கான கைசிக ஏகாதசி விழா ரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ரங்கநாச்சியார் மற்றும் ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரங்கள், குடைகள் மற்றும் மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் ஜவகர் ரெட்டி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரங்கம் கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

ரங்கம் கோயிலில் உள்ள ரங்கவிலாச மண்டபத்தில் நேற்று வஸ்திர மரியாதை பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களுடன் நடைபெற்ற வீதியுலாவைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலர் ஜவகர் ரெட்டி, மங்கல பொருட்களை ரங்கம் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமனிடம் வழங்கினார். அப்போது அறங்காவலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்