ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் | பயிற்சியை தொடங்கியது சிஎஸ்கே

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமை சிஎஸ்கே நேற்று தொடங்கியது.

முதற்கட்டமாக இந்த பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இதற்காக வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, ஆல்ரவுண்டர்களான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் சோலங்கி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கேப்டன் எம்.எஸ்.தோனியின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நேற்று முன்தினம் அவர் தனது மனைவி சாக் ஷியுடன் ஜாம்நகரில் நடைபெற்ற தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அடுத்த வாரத்தில் தோனியும் மற்ற வீரர்களும் பயிற்சி முகாமில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE