ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் // நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை :

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தற்போது 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனையடுத்து பெற்றோர்கள் புகார் அளித்த நிலையில், உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தக்கோரி ராமநாதபுரம் எம்பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி, மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து எம்பி அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிந்த 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக பள்ளியின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் 8 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இருப்பதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக் கோரி தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்பி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE