மூத்த பத்திரிகையாளர் - ‘இந்து கல்யாணம்’ காலமானார் :

மூத்த பத்திரிகையாளர் என்.கல்யாணசுந்தரம்(86) அமெரிக்கா வில் நேற்று முன்தினம் காலமானார்.

1935 ஏப்.16-ம் தேதி மதுரையில் பிறந்த கல்யாணசுந்தரம், 1961-ல் ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் பணியில் இணைந்தார். தொடக்கத்தில் வேலூர், சேலத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், சென்னைக்கு மாறியதும் அரசியல் நிருபராகப் பணியாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். காங்கிரஸ் கட்சி, காவிரி பிரச்சினை, உணவுப் பொருள் வழங்கல் துறை தொடர்பான செய்திகளை விரிவாகப் பதிவு செய்தவர்.

குடும்ப திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றவர், மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு மனைவி, இரு மகள்கள், மகன் உள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தி இந்து' நாளிதழில் அரசியல் செய்தியாளராக ஏறத்தாழ 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் என்.கல்யாணசுந்தரம் மறைவு செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன்.

அரசியல் வட்டாரத் தில் அனைவராலும் 'இந்து கல்யாணம்' என்று அழைக்கப்பட்ட அவர், கருணாநிதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

சென்னை நிருபர்கள் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற அமைப்புகளில் பொறுப்பு வகித்து பத்திரிகையாளர்களின் நலன்களுக்காகவும் அவர் பாடுபட்டார். கல்யாணசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிகைத் துறை நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன், சென்னை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.ரங்கராஜ் உள்ளிட்டோரும் கல்யாணசு ந்தரத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்