மதுரை விமான நிலையத்தில் 2 பேரிடம் - ரூ.29.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் :

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.29.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை 2 பேரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில் குடியேற்றம், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் செல்ல முயன்ற இருவரின் காலணிக்குள் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 1,100 நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த முகமது அமீர், சிக்கந்தர் ஆகியோரை பிடித்தனர். அவர்களை அவனியாபுரம் போலீஸில் ஒப்படைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு (இந்திய ரூபாயில்) ரூ.29 லட்சத்து 40 ஆயிரம் என தெரிய வந்தது.

பெண் கைது

கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் தாலுகா பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் நந்தினி (28). இவர் செவிலியர் வேலைக்காக 2019-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து ஏமனில் சென்று செவிலியராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நந்தினியின் பாஸ்போர்ட்டை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஏமனில் இந்தியர்கள் பணிபுரிய மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அதை நந்தினி மீறியுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து நந்தினியை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து சொந்த பிணையில் போலீஸார் விடுவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE