பாமக நிர்வாகி கொலைக்கு காரணமானோரை கைது செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் :

சென்னை: காரைக்கால் பாமக நிர்வாகி தேவமணி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி திருநள்ளாறில் கூலிப் படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்து தேவமணி அப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டவிரோதமாக உயர்த்தியபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்.

புதுவை மாநிலத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகளை சட்டப் போராட்டம் நடத்தி மூடுவதற்கு வகை செய்தவர்.

திருநள்ளாறு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும், பொதுவாழ்விலும் உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் அவர் நம்மை விட்டு பிரிக்கப்பட்டிருப்பது மிகுந்த துயரமளிக்கிறது. தேவமணியை படுகொலை செய்தவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவரது குடும்பத்துக்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்