வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ல் மறியல் : அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 27-ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்ததொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை வகித்தார். வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டம் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் விளக்கினார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 23, 24-ம் தேதி ஆகிய இருநாட்கள், மத்திய தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டு, 25 ஆயிரம் துண்டறிக்கைகள் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

ரயில் மறியல்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வரும் 27-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது, திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி ஆகிய 3 மையங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவது, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம் ஆகிய 4 மையங்களில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE