வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலை :

வேப்பனப்பள்ளி அடுத்த சீலேப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடப்பன் (66). இவர் நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டின் அருகேயுள்ள தக்காளி தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெங்கடப்பனை வழி மறித்து வெட்டிக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், வேப்பனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

மேலும், வெங்கடப்பனின் மருமகள் ஜமுனாவின் தம்பி கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வெங்கடப்பனின் மகன் முருகேசன் கடந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி கரோனாவால் உயிரிழந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஜமுனா தனது மகன்கள் வேல்முருகன் (11), வெங்கடேஷ் (8) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றபோது, அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் ஜமுனா உட்பட 3 பேரும் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்திருப்பது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE