அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் - தமிழக பட்ஜெட் மீது அதிருப்தி :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்கள், 26 மண்டலங்கள், 322 பணிமனைகள் மூலம் 19,496 பேருந்துகள் நாளொன்றுக்கு 84.07 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படுகின்றன. 1,26,089 பணியாளர்கள், 83,385 ஓய்வூதியர்கள் உள்ளனர். கடந்த வாரம் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 1 கி.மீ. இயக்க ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது என்றும், மாநில போக்குவரத்து கழகங்களின் முக்கிய செலவினங்கள் 2020-2021-ல் ரூ.13,353.77 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் 2021-22-ம் ஆண்டுக்கு மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி கள் கட்டணமின்றி பயணிக்க ரூ.703 கோடி, டீசல் மானியமாக ரூ.750 கோடி, ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செலவினங்கள் கடந்த ஆண்டு ரூ.13,353.77 கோடி இருக்கும்போது, கடந்த காலத்தைப்போல் நாளொன்றுக்கு 84.07 லட்சம் கி.மீ. இயக்கும்போது 1 கி.மீ. இயக்க இழப்பு ரூ.59.15 என்ற நிலையில் ஆண்டுக்கு ரூ.18,133 கோடி இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.7 ஆயிரம் கோடி கழக நிர்வாகங்களால் செலவு செய்யப்பட்டுள்ளது. அது வெள்ளை அறிக்கையில் தனியாக சுட்டிக்காட்டப்படவில்லை. அத்தொகையை அரசு வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வூதியத் துக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE