உடன்குடியில் பெண்களை தவறாக பேசி - சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் கைது :

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்களைப் பற்றி தவறாக பேசி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ம.ஜெயக்குமார் (40). இவர், நேற்று முன்தினம் மது போதையில் ஒரு குறிப்பிட்ட மத பெண்களை தவறாகப் பேசி, அதனை வீடியோ பதிவு செய்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.பரகத்துல்லாஹ் என்பவர் ஜெயக்குமாரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பரகத்துல்லாஹ் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி விசாரணை நடத்தி ஜெயக்குமாரை கைது செய்தார்.

இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோல் சாதி, மதக் கலவரங்களை தூண்டும் வகையில் வன்முறையான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் யாராவது பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE