கோவை பெண் காவலருக்கு மிரட்டல் நாங்குநேரியில் ஆண் காவலர் கைது :

கோவை : கோவையில் பெண் காவலரின் புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டலில் ஈடுபட்ட, ஆண் காவலரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஏழனைபாண்டி (27). இவர், நாங்குநேரி காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட காவல் நிலையத்தில், காவலராக பெண் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2018-ம் ஆண்டு ஏழனைபாண்டியும், பெண் காவலரும் கோவை மாவட்ட ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். அப்போது இருவரும் பழகி வந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஏழனைபாண்டியுடன் பேசுவதை பெண் காவலர் நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஏழனைபாண்டி, பெண் காவலருடன் எடுத்த புகைப்படங்களை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், மானபங்கம், தகவல் தொழில்நுட்ப சாதனத்தை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் ஏழனைபாண்டி மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் நாங்குநேரியில் இருந்த அவரை, சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE