மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே - கர்ப்பிணி சுயமாக பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு :

கோவையில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்ததால், குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக தாய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள, உப்பு மண்டி 7-வது வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புண்ணியவதி(32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு 6 வயதான மூத்த மகன் உட்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், புண்ணியவதி கடந்த மார்ச் மாதம் மீண்டும் கர்ப்பமானார். ஆனால், அவருக்கு தான் கர்ப்பமானது பிடிக்கவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான புண்ணியவதி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லமுயன்றனர். ஆனால், புண்ணியவதி மருத்துவமனைக்கு வர மறுத்துவீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து குடும்பத்தினர் வலியுறுத்தியதால், அவர்களை வீட்டுக்கு வெளியே அனுப்பி, கதவை உள்பக்கமாக புண்ணியவதி தாழிட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தொப்புள் கொடியை சரியாகதுண்டிக்காமல், குழந்தையின் வயிற்றுடன் சேர்த்து துண்டித்துள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. இதையடுத்து குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, குழந்தை நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த, கோவை மாவட்ட குழந்தைகள் நலச்சங்க அலுவலர் கார்த்திக் பிரபு, கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி கூறும்போது, “தாய் புண்ணியவதிக்கு இக்குழந்தை பிறப்பது பிடிக்கவில்லை. எனவே, குழந்தை இறந்து பிறக்கவேண்டும் அல்லது பிறந்த உடனே இறக்க வேண்டும் என்றஎண்ணத்துடன், குடும்பத்தினர் வலியுறுத்தியும் கேட்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் புண்ணியவதி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரசவத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE