அந்தியூர் வேம்பத்தி ஏரி நீரால் வீடுகள் சேதம் : மாற்றிடம் வழங்கக் கோரிக்கை

அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர்மழையால், வேம்பத்தி ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்து, எந்த நேரத்திலும் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஏரி முழுமையாக நிறைந்தால், உபரிநீர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏரியை ஒட்டியவாறு உள்ள பகுதியில் பட்டியலினத்தைச் சேந்த 10 குடும்பத்தினரின் வீடு உள்ளது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததால், இவர்களது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அருகில் உள்ள தோட்டக்குடியாம்பாளையம் அரசுப்பள்ளி வகுப்பறையில் தங்கியுள்ளனர்.

இவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அதன்பின்னர் அந்தியூர் வட்டாட்சியரைச் சந்தித்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், ஏரி வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் செயலாளர் ஆர். முருகேசன் கூறியதாவது:

ஏரிக்கு அருகில் குடியிருந்த, தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினர் நிலை குறித்து அந்தியூர் எம்.எல்.ஏ.கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரும், அதிகாரிகளும் இன்று (8-ம் தேதி) ஏரிப்பகுதியைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடம் வழங்கவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE