குறைதீர் கூட்டத்தில் - பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பில் நல உதவியை ஆட்சியர் வழங்கினார் :

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, பசுமை வீடு, வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாலை வசதி, பேருந்து வசதி, தகனமேடை, புதிய மின் இணைப்பு, வேலை வாய்ப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 552 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். கூட்ட முடிவில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா, ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, உதவி ஆணையர் (கலால்) தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், பழங்குடியினர் நல அலுவலக திட்ட அலுவலர் கதிர் சங்கர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE