காரைக்கால்: புதுச்சேரி அரசு மழை நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநள்ளாறு கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் திருநள்ளாறு தொகுதி செயலாளர் வல்லவன் தலைமை வகித்தார்.
மழை பாதிப்புக்காக புதுச்சேரி அரசு அறிவித்த ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொடர் கனமழை காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். திருநள்ளாறில் உள்ள கூட்டுறவு (கான்ஃபெட்) பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி, நிரவி-திருப்பட்டினம் தொகுதி செயலாளர் சு.விடுதலைக்கனல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.