கைத்தறி பட்டுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்யக் கோரி - நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் :

கைத்தறி பட்டுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்யக் கோரி நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து நெசவாளர் கூட்டமைப்பு குழுவின் தலைவர் கே.ஜெ.லெனின் தலைமை வகித்தார். பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோகுல், நெசவாளர் கூட்டமைப்பு குழுவின் செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க செயலாளர் ராயா.கோவிந்தராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கைத்தறி பட்டுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12 சதவீத ஜிஎஸ்டியை முழுவதுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். கச்சா பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சா பட்டுவை வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியு நாகேந்திரன், சந்திரன், ஏஐடியுசி மணிமூர்த்தி, தமாகா செல்வம், துரைராஜ், ரங்காச்சாரி மற்றும் ஏராளமான நெசவு தொழிலாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டமைப்பு குழு பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE