ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் பண மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு :

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பத்மநாபன், காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் ஒப்பந்ததாரராக உள்ளார்.

இவர், கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்களுக்குரிய இ.எஸ்.ஐ தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து தொழிலாளர்கள் ஓஎன்ஜிசி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஓஎன்ஜிசி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதில், தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ தொகை செலுத்தப்படாமல் இருப்பதும், தொகை செலுத்தியதுபோல போலியாக ஆவணங்களை தயாரித்து ஓஎன்ஜிசியிடம் சான்றிதழ் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதுபோல, ரூ.2.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஓஎன்ஜிசி பொறியாளர் ராஜசேகர், நிரவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஒப்பந்ததாரர் பத்மநாபன் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE