உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் மூன்று நாள் குறும்பட விழா நேற்று தொடங்கியது.
திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வு உதகை அசெம்பளி ரூம்ஸ் திரையரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தொடங்கி வைத்து, குறும்படத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 3-வது குறும்பட விழா தொடங்கியுள்ளது. இக்குறும்பட விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. இறுதி நாளன்று சிறந்த குறும்படத்துக்கு விருது வழங்கப்படும். இவ்விழாவில் பழங்குடியினர் தொடர்பான திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. இவ்வாறு ஆட்சியர் கூறினார். தொடக்கவிழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதகை வட்டாட்சியர் தினேஷ், பிசி டிவி தலைவர் ரங்கராஜன், அசெம்பளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாதவன்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.