வெளிநாடுகளில் இருந்து ஈரோடு திரும்பிய13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு :

உருமாறிய கரோனா வைரஸான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நேற்று முன்தினம் 13 பேர் ஈரோடு வந்துள்ளனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லை என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், ஒரு வாரத்திற்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் செவிலியர்கள் மற்றும் குழுவினர் சென்று கண்காணித்து வருகின்றனர். ஒரு வாரம் முடிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வருமாயின், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE