எஸ்.ஐ கொலை வழக்கில் 3 பேர் கைது - சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ் பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலையில் ஆடு திருடும் கும்பலை தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 15 கி.மீ தொலைவுக்கு விரட்டிச் சென்றார்.

புதுக் கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதை அருகே பிடித்து விசாரணை நடத்திய போது, திருடர்கள் பூமிநாதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக மத்திய மண்டல பொறுப்பு ஐஜியாக இருந்த க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில் டிஐஜி சரவணசுந்தர், எஸ்.பி சுஜீத் குமார் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவலின்பேரில், கொலை நடந்து 24 மணி நேரத்துக்குள் 3 பேரை கண்டறிந்து கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த டிஜிபி சைலேந்திரபாபு, இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த தனிப்படையில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பிக்கள் சிவசுப்பிரமணியன் (கீரனூர்), அருள்மொழி அரசு (இலுப்பூர்), இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன் (துவாக்குடி), கோபாலகிருஷ்ணன் (மாத்தூர்), சுப்பிரமணி (கீரனூர்), செந்தில் மாறன் (கந்தர்வக்கோட்டை), சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில் குமார் (டிஐஜி தனிப்படை), லோகேஸ்வரன் (சைபர் கிரைம்), மாரிமுத்து (புதுக்கோட்டை) ராஜேஷ் (தஞ்சாவூர்) உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE