கோவையில் இருந்து கேரளா செல்லும் : பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு :

கோவை: தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவையிலிருந்து கேரளாவுக்கு சென்றுவரும் அரசுப் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் கரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் 5 மண்டலங்களிலும் வார்டுகள் வாரியாக தொற்று பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பேருந்துகள் மூலமாக வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்வோரால் தொற்றுப் பரவல் ஏற்படுவதைத் தடுக்க கோவையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள், அங்கிருந்து வரும் பேருந்துகளுக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளின் டயர், பக்கவாட்டுப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதுடன், இருக்கைகள், கைப்பிடிகளில் கிருமிநாசினி கொண்டு துடைக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு குறையும் வரை இப்பணி தொடரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE