கோவை விளாங்குறிச்சியில் 3.5 ஏக்கரில் மனைப்பிரிவுக்கு நகர ஊரமைப்பு இயக்குநர் மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மனைப்பிரிவில் பூங்கா இடத்தை போலி வரைபடம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அங்கு குறிப்பிட்ட 1.9 ஏக்கர் பரப்பு கொண்ட மனையிடத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தியாகராஜன், மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம் மற்றும் கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலியான வரைபடம் மூலமாக 1.9 ஏக்கர் இடத்தில் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றிருப்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வீட்டு மனைக்கான ஒப்புதல் நேற்று ரத்து செய்யப்பட்டது.