திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே ஓடையம் துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெகன் (29), காயத்ரி. இவர்களது மகள்கள் தேஜஸ்வி (4), சுபஸ்வி (2). குடும்பத்துடன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே காசிப்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டில் ஜெகன் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெகன், கரோனா பரவல் காலத்தின்போது வேலையிழந்துள்ளார். பின்னர், தந்தையுடன் சேர்ந்து ஆடுகள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே, கடன் வாங்கியுள்ளார்.
இதனால் மனவேதனையுடன் இருந்த அவர், நேற்று முன்தினம் 2 மகள்களையும் அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான வெள்ளகோவிலை அடுத்த துத்திக்குளத்துக்கு வந்தார். அங்கு தனது உறவினர்களை சந்தித்துவிட்டு, குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடியபோது, துத்திக்குளம் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாயக் கிணற்றில் மூவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் வெள்ளகோவில் போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொழில் பிரச்சினை மற்றும் கடன் தொல்லையால் குழந்தைகளுடன், ஜெகன் தற்கொலை செய்துள்ளது, வெள்ளகோவில் போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.